தமிழகத்தில் மார்ச் 20-ம் தேதி வரை 3 பேர் நோய் தொற்றுக்கு ஆளான நிலையில், ஒருவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருந்தார். அதன் பின் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தலா மூவர் வீதம் வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மார்ச் 24-ம் தேதி 6 பேருக்கும், 25ம் தேதி 8 பேருக்கும், 26-ம் தேதி மூன்று பேருக்கும் கொரோனா பரவியது. அதிகபட்சமாக வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.
அதில், கொரோனா தொற்று கண்டறியப்பட்ட அரியலூரை சேர்ந்த 25 வயது பெண் சென்னையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் பணியாற்றி வந்ததும், உடல்நலக்குறைவால் கடந்த 9-ம் தேதி சொந்த ஊர் திரும்பியதும் தெரியவந்துள்ளது. அரியலூர் அரசு மருத்துவமனையில் 20-ம் தேதி அனுமதிக்கப்பட்ட அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா நகரில் 39 வயது நபருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து அவர் முதுகலை பட்டம் பயின்று வரும் அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை வளாகத்தில் உள்ள மாணவர் தங்கும் விடுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சி சார்பில் தங்கும் விடுதியில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் சனிக்கிழமை புதிதாக இருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அண்மையில் மேற்கிந்திய தீவுகளில் இருந்து திரும்பிய கும்பகோணத்தை சேர்ந்த 42 வயது நபருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏழு பேருக்கு யார் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டது...? அரசின் செய்திக்குறிப்பிலும் தகவல்கள் இல்லை